தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்கமுடியாது; உச்சநீதிமன்றம்
புதுடில்லி: தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, கொரோனா மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்துவருகிறது. இந்நிலையில் தடுப்பூசி தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், ‛நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது. தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்தால் விலை எப்படி ஒரே மாதிரியாக இருக்கும்?’ என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி விநியோகத்தின் கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் ஆக்சிஜன் உதவிகள் கேட்பதை மாநில அரசுகள் தடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.